Tuesday 15 October 2013



காதல் பொய்கள்

பெ. கருணாகரன்

காட்சி - 1

ஊட்டி...
ஏரியில் படகு போய்க்கொண்டிருந்தது. உள்ளே பத்மினி, ஷ்யாம் சுந்தர்.
“ஷாம்...
“ம்...
“மீசையில்லாத இந்த மழு மழு முகம், அளவான கிருதா... அப்படியே உங்களைப் பார்க்க நடிகர் ஆர்யா மாதிரியே இருக்கு. கடிச்சுத் தின்னலாம் போல...
“மாமிச பட்சினியே... என் மனம் கவர் பத்மினியே...
அவன் பாடத் தொடங்கினான்.
“சார் குஷி மூட்ல இருக்கிற மாதிரி தெரியுது. இவ தொல்லை இத்தோடு ஒழிஞ்சுதுங்கிற சந்தோஷம்தானே..?
“பத்து... நீ முட்டாள். பிரியப் போறதை நினைச்சு அழச் சொல்றியா? இடுக்கண் வருங்கால் நகுக... அவன் கண்களின் ஓரம் ஈரம் எட்டிப் பார்த்தது.
“ஏய்.. என்ன இது, அழுதுக்கிட்டு..? பிரியறது கஷ்டமா இருந்தால் சொல்லுங்க... நான் சொன்ன மாதிரி மலையிலேர்ந்து குதிச்சு செத்துப் போயிடுவோம்.... எத்தனையோ காதலர்களை இணைத்து வைத்த இந்த மலை, நம்மையும் இணைத்து வைக்கட்டும்...
“என்ன பத்து மறுபடியும் முட்டாள் மாதிரி உளர்றே... ஏன் சாகணும்? சோகம் தாங்கு... முடியலைன்னா அழுதுக்கோ. சாகாதே. லைஃப் எவ்வளவு பெரிய மிராக்கிள். வாழறதுக்குக் கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணலாமா? சோகம் மறந்து சந்தோஷமா இருக்கப் பழகிப்போம்... என்றவாறே கண்களின் ஓரத்தைத் துடைத்துக் கொண்டு சொன்னான்.
“பத்து... இந்தப் பச்சைப் புடவையிலே உன்னைப் பார்க்கையில் கை துறுதுறுங்குது...

காட்சி-2

“இந்த நீலப் புடவையிலே நீ தேவதை மாதிரி இருக்கே... என்றான் பரஞ்சோதி. இடம் – அதே ஊட்டியில் பொட்டானிக்கல் கார்டன். ஆனால், எதிரிலிருந்த சொர்ணாவின் முகத்தில்தான் சந்தோஷம் இல்லை.
“எப்படி உன்னால் இந்த நேரத்தில் சந்தோஷமா இருக்க முடியுது ஜோதி? சோகம் வரலே? கண்ணீர் வரலே... பிரியப் போறதை நினைச்சால் உனக்குத் தவிப்பா இல்லே? நாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காமலேயே இருந்திருக்கலாம் போல தோணலை?
“இல்லை சொர்ணா... உன்னைப் பார்த்தது சந்தோஷம். பழகியது சந்தோஷம். கடந்த கால சந்தோஷங்களில் நிகழ்காலச் சோகங்களை மறப்போம்...
“எனக்கு முடியலே... நாம புன்னகை மன்னன்ல கமல் - ரேகா குதிச்ச மாதிரி குதிச்சிடலாம்...
“உணர்ச்சி வசப்படாதே. நம்ம பிரிவை வலி இல்லாமல் சந்தோஷமா ஒரு கெட் டுகெதரா வச்சுக்கலாம்னுதானே இங்கே வந்தோம். திட்டத்தை மாற்றாதே. என் அக்காவின் முகத்தை ஒருமுறை நீ நினைச்சுப் பார். கால் ஊனமுள்ள அவளைக் கல்யாணம் பண்ணிக்க நல்ல இடமா ஒரு வரன் வந்தது. ஒரே நிபந்தனை, பெண் கொடுத்துப் பெண் எடுத்துக்கணும்கிறாங்க. நான் கட்டிக்கிறதைத் தவிர, வேறு வழி இல்லையே சொர்ணா. குடும்பத்திலே இருக்கிறவங்க சந்தோஷத்துக்காக, நாம் சில தியாகங்களைச் செய்து தானே ஆகணும்?
“பொண்ணு பேர் என்ன சொன்னே? என்றாள் ஏக்கமாக.
“பத்மினி...

காட்சி – 1A

“மாப்பிள்ளை பெயர் என்ன? என்று கேட்டான் ஷ்யாம் சுந்தர்.
“பரஞ்சோதி...
“லக்கி பர்சன்... என்று பெருமூச்சுடன் சொன்னவன், “பசிக்கிற மாதிரி இருக்கு... வா, சாப்பிடலாம்... என்று ஓட்டலுக்கு அழைத்துப் போனான்.
ஓட்டலில் அவன் இட்லியும் ரவா தோசையும் சொன்னதும்...
“எனக்கும் அதையே சொல்லுஙக... என்றாள் பத்மினி.
“உனக்கும் இதுதான் பிடிக்குமோ?
“ஊத்தப்பம்தான் பிடிக்கும்.  ஆனாலும் இந்த நிமிஷத்திலிருந்து இட்லி, ரவா தோசை எனக்கும் ஃபேவரிட்... என்றாள் குறுகுறுப்புடன் அவனைப் பார்த்தவாறு. சாப்பிட்டு முடித்துவிட்டு, இரண்டு பாதாம் கீர் ஆர்டர் செய்தாள். “ஃபார் அவர் ஸ்வீட் ஃபேர்வெல்.... என்ற அவளின் கமெண்ட்டை ரசிக்கும் மூடில் அவன் இல்லை.
“இன்றிலிருந்து நான் ஸ்வீட் சாப்பிடறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்... என்றான் கசப்புடன்.

காட்சி – 2A

“எனக்கு ஊத்தப்பம் வேண்டும்... என்றாள் சொர்ணா.
“சரியான ஊத்தப்பம்... என்று கிண்டலடித்தான் பரஞ்சோதி. சாப்பிட்டுக் கொண்டே அவன் சொன்னான். “கிளியோப்பாட்ராவின் மூக்கு சற்றுக் கோணலாகியிருந்தால் ரோமப் பேரரசு நிமிர்ந்திருக்கும்னு சொல்வாங்க. எடுப்பான உன் மூக்கு நான் தடுமாறக் காரணமாகி விட்டது... –அவன் சொன்னதை அவள் ரசித்தாள்.
“காதில் அணிந்திருக்கும் உன் ஜிமிக்கி, மிக அழகாகவும், சிறியதாகவும் நீ சிரிக்கும்போதெல்லாம் ஊஞ்சலாடி இம்சைப்படுத்துது. வலப்புற மூக்குக்கு அருகிலுள்ள மச்சம் திருஷ்டிப் பொட்டு மாதிரி குதூகலப்படுத்துது... என்றான் கிறக்கமாக.
“டூ மச்... டூ மச்... அவளது உதடுகள் பதற்றமாய் உச்சரித்தாலும் அவனின் கடைசி வர்ணனையை ரசிப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை.

காட்சி-1B

“வேறு வழியே இல்லையா? ஏக்கமாய்க் கேட்டான் ஷ்யாம்.
“இல்லே ஷாம்... இதுதான் நாம கடைசியாப் பார்த்துக்கிறதா இருக்கும். நான் உங்களைக் காதலிக்கிறேன்னு தெரிஞ்சதும் அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சுட்டாரு. உங்களைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒற்றைக் காலில் நின்றேன். பயன் இல்லே... கயிறை எடுத்து ஃபேன்ல மாட்டித் தொங்கப் போயிட்டாரு. சின்ன வயசுலேர்ந்து பாசத்தைக் கொட்டி வளர்த்தவர். அவர் விருப்பத்தை நிறைவேற்ற என் விருப்பத்தை மாற்றிக்கிறதைத் தவிர வேற வழி தெரியலே... என்றாள்.
“ஒரு வருடம் லவ் பண்ணியிருப்போம். அதையெல்லாம் மறக்க முடியும்னு எனக்குத் தோணலை. ஏதாவது ஒரு ரூபத்தில் நீ என் நினைவுகளில் வந்து துன்புறுத்திக்கிட்டே இருப்பே... என்றான் ஷ்யாம்.

காட்சி – 2B

“துன்பமாத்தான் இருக்கும். கொஞ்சநாள்தான். அப்புறம் எல்லாம் மறந்துடும். நமக்காக மட்டுமே நாம் வாழ்ந்திடறதில்லையே. மற்றவர்களுக்காகவும் நாம் வாழ வேண்டியதிருக்கே.. என்றான் பரஞ்சோதி.
“போடா முட்டாள்... ஆண்கள் எளிதில் எல்லாத்தையும் மறந்துடுவீங்க. பெண்கள்?  வெறித்தனமாக் காதலிச்சவனை இப்ப வெல்விஷராய்ப் பிரிய சொல்றே. பிரிஞ்சுடுவோம். கல்யாணத்துக்கு மறக்காமல் பத்திரிகை அனுப்பு. அட்சதை போட வர்றேன்... சிரித்துக் கொண்டும் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டும் அவள் சொன்னாள்.

காட்சி -3

மலர்த் தோரணங்கள் தொங்கவிடப் பட்டு, மலர் தூவி  அலங்கரிக்கப்ட்டிருந்தது படுக்கையறை. முதலிரவு... மேலே மின்விசிறி சத்தமின்றி ரங்க ராட்டினம் ஆடியது. படுக்கையில் புன்னகையுடன் பரஞ்சோதியும், பத்மினியும்.
“பத்மினி... முன் பின் அறிமுகமில்லாத நம்மை காலம் சேர்த்து வச்சிருக்கு. அதனால, நாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாமா? – அவள் மௌனமாய்த் தலையாட்டினாள்.
“உன் நிறத்துக்கு இந்தப் பச்சைப் புடவை சுமாராதான் இருக்கு, நீல நிறத்தில் புடவை கட்டினால் தேவதை மாதிரி இருப்பே... என்றான்.
“பச்சைப் புடவைதான் எனக்கு நல்லா இருக்குன்னு என் ஃபிரெண்ட்ஸ் சொல்லுவாங்க. ஓ.கே. நாளைக்கே உங்க விருப்பத்தை நிறைவேற்றிட்டால் போச்சு... கூலாய்ச் சொன்னாள் அவள்.
“அப்புறம் இன்னொரு விஷயம். உனக்கும் எனக்கும் ரெண்டு வயசு வித்தியாசம்தான் இருக்கும். அதனால இந்த வாங்க போங்கன்னு மரியாதையெல்லாம் வேணாம். பரஞ்ஜோதின்னு கூப்பிடு. வாய் வலிக்காமல் சுருக்கி ஜோதின்னு கூடச் செல்லமாய்க் கூப்பிடலாம். அழகாக இருக்கும்...
“சரிடா ஜோதி... என்று சிரித்துக் கொண்டே அவனது கன்னத்தில் செல்லமாகத் தட்டியவள், “என்னையும் நீங்க பத்மினின்னு நீளமாய்க் கூப்பிடாமல் பத்துன்னு சுருக்கிச் செல்லமாக் கூப்பிடப் பாருங்க. அன்னியோன்னியம் பெருகும்...‘ என்றவள், அவனது கிருதாவைப் பிடித்து இழுத்தாள்.
“என்னது இவ்வளவு நீள கிருதா..? இது ரொம்ப பழைய ஸ்டைல். கிருதா அளவைக் குறைச்சுட்டு மீசையை எடுத்துடுங்க. ஒரு சாயல்ல ஆர்யா மாதிரியே இருப்பீங்க... என்றாள்.
“நடிகர் ஆர்யாவை உனக்குப் பிடிக்குமோ?
“ம்... ரொம்பவும்... என்று மேலும் கீழுமாகத் தலையாட்டினாள் தலைகுனிந்தவாறே. அவன் டீபாயின் மீதிருந்த தட்டிலிருந்து ஒரு ஜாங்கிரியை எடுத்து விண்டு அவளிடம் கொடுத்தான். அவள் வேண்டாமென்று தலையாட்டினாள்.
“எனக்கு ஸ்வீட் பிடிக்காதுங்க...
“நீயே ஒரு ஜாங்கிரி... உனக்கெதுக்கு ஜாங்கிரி? என்று சிரித்துக் கொண்டே சொன்னவன், “உனக்கு என்ன உணவெல்லாம் பிடிக்கும்..? என்று கேட்டான்.
“இட்லி, ரவா தோசை இரண்டும்தான் ஃபேவரிட். ஒரு பிடி பிடிப்பேன். உங்களுக்கு?
“ஃபிரெண்ட்ஸ் எல்லாம் ஊத்தப்பம்னு என்னைக் கிண்டல் பண்ணுவாங்க...‘ என்று கூறியவன், சட்டையைக் கழற்றி கட்டில் கைப்பிடியில் போட்டான். பிறகு அவளது முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு வந்தான்.
“உன் மூக்கு இன்னும் கொஞ்சம் எடுப்பாக இருந்திருக்கலாம். உன் முக அமைப்புக்கு இன்னும்  பொருத்தமாக இருந்திருக்கும்...
“அப்புறம்?
“உன் ஜிமிக்கி கொஞ்சம் பெரிசா இருக்கு. சிறிதாக இருந்தால் அழகு இன்னும் அதிகமாகும்...
“அப்படியே ஆகட்டும் பிராணநாதா... என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.
“அப்புறம்... அப்புறம்...? யோசித்தவன், தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து பால்பாயிண்ட் பேனாவை எடுத்தான். அவளது மூக்கின் வலது பக்கத்துக்கு அருகில் புள்ளி வைத்தான்.
“ஏய்... என்ன பண்றே..? செல்லமாகச் சிணுங்கினாள்.
“மச்சம். இந்த இடத்தில் உனக்கொரு மச்சம் இருந்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்... என்றான். பிறகு சிறிது யோசித்து விட்டு, “ஹனி மூனுக்கு எங்கே போகலாம்? என்று கேட்டான்.
“அவள் சொன்னாள் ஊட்டி...
“நான் நினைச்சேன்... நீ சொல்லிட்டே... இதுக்கு முன்னாடி ஊட்டிக்குப் போயிருக்கியா?
“ம்ஹூம்... நீங்க?
“ம்ஹூம்... என்றான் அவனும் – பார்வையைத் திருப்பிக் கொண்டு.