அரட்டைக்கு
மட்டுமா ஃபேஸ்புக்?
முகநூல் நண்பர்கள் சிலர் சங்கம் வைத்து சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்
சம்பவம் - 1
புதுவையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி
சர்மிளா. அவளது தந்தை
சக்திவேலிடமிருந்து வசந்தகுமாருக்கு ஒரு
கடிதம் வருகிறது. சர்மிளாவின் இதய அறுவை சிகிச்சைக்கு 2,40,000 ரூபாய் தேவைப்படுவதாகவும் இதில்
புதுவை முதலமைச்சர் நிதியிலிருந்து ரூ. 1,20,000 கிடைத்துள்ளதாகவும்
சில இடங்களில் கடன்வாங்கி அவரே 30,000 ரூபாய் தயார்
செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மீதமுள்ள ஒரு லட்ச
ரூபாய் சிகிச்சைக்குத் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார் சக்திவேல்.
(கடிதத்துடன் தனது மருத்துவமனை ஆவணங்களையும்
இணைத்திருந்தார்)
உடனே இதுகுறித்து தனது சுவரில் நிலைத்தகவல்
எழுதினார் வசந்தகுமார்,
ஏற்கெனவே அறுவைச் சிகிச்சை தாமதமாகிக்
கொண்டிருப்பதால் உடனடியாக
அறுவைச் சிகிச்சை செய்து அந்தச் சிறுமியின்
உயிரைக் காப்பாற்ற வேண்டியுள்ளது.
அதனால்,
உதவி செய்பவர்கள்
நேரடியாகவும் உடனடியாகவும் மருத்துவமனை பேரிலேயே காசோலை அனுப்புமாறு கோரிக்கை
வைத்திருந்தார். அடுத்த சிலதினங்களிலேயே போதுமான பணத்தை முகநூல் நண்பர்கள்
மருத்துவமனை வங்கிக் கணக்கிலும் நேரிலும் சென்று கொடுத்தனர். வசந்தகுமார் மற்றும் முகநூல்
நண்பர்களான கலாரானியும் அவரது கணவரும் நேரில் சென்றும் சிறுமியை அருகில் இருந்தும்
பார்த்துக் கொண்டனர், இப்போது, சிறுமி
சர்மிளா சிகிச்சை முடிந்து நலமாக இல்லம் திரும்பி விட்டார், அத்தோடில்லாமல்
பாண்டிச்சேரி சென்று முதல்வர். ரங்கசாமி அவர்களைச் சந்தித்து நன்றி சொல்லி
வந்திருக்கிறார்கள்.
சம்பவம் - 2
ஈரோடைச் சேர்ந்த மில் தொழிலாளியின் ஒரே
மகன் சிவசங்கர். தாயார் லதா
குடும்பத்தலைவி. எட்டாம் வகுப்பு
தேர்வெழுதி விட்டு 9 ஆம் வகுப்பு செல்லும் கனவுகளோடு இருந்தவனுக்கு திடீரென்று
கையில் வீக்கம் ஏற்பட்டது. கோவை கொங்கு நாடு மருத்துவமனையில் பரிசோதித்த
மருத்துவர்கள் சிறுவனுக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பதாகக் கூறி அந்த ஏழைப்
பெற்றோருக்கு அதிர்ச்சியளித்தனர். உடனடியாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை
செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சென்னை புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
சிவசங்கருக்கு சோதனைகள் செய்த மருத்துவர்கள் குழு,
ரத்தப் புற்றுநோய்
தீவிரமடைந்து காணப்படுவதாகவும் பலமான வீரியமான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் முதல்கட்ட
சிகிச்சையின்போது, குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு தினமும்
இரண்டு யூனிட் இரத்தம் தேவைப்படுவதாகவும் கூறினர். அதிலும் குறிப்பாக இரத்த்தில்
உள்ள தட்டணுக்கள் (PLATTELET) மட்டும் தேவைப்படுவதாகவும் தெரிவித்து
விட்டனர். சக முகநூல் நண்பர் கயல்விழி லட்சுமணன் மூலம் இதுகுறித்துத் தகவல் அறிந்த
வசந்தகுமார் மருத்துவமனை விரைந்தார். சிறுவனைப்போய்ப் பார்த்தார். தைரியமளித்தார்.
முகநூலில் சிறுவனுக்கு ரத்தம் வேண்டும் என்பதை நிலைத்தகவலாகவும் எழுதினார். அதனைப்
படித்த,நண்பர்கள் ஒரு மாதச் சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை அட்டவணை
போட்டுக்கொண்டு தொடர்ந்து வழங்கினர். தவிர, வசதியில்லாத அந்தச் சிறுவனின் மற்ற
மருத்துவச் செலவுகளுக்காகவும் நண்பர்கள் இணைந்து முகநூல் முலம் நிதி திரட்டினார், இவர் சொன்னதன்
பேரில் மருத்துவமனைக்கு முகமே அறியாத பல நபர்கள் வந்து அந்த தாயாரிடம் பண உதவி
அளித்தனர், இதன் மூலம் கிட்ட தட்ட 1 , 50 ,௦௦௦ பண உதவி கிடைத்தது. தற்போது முதல்கட்ட
சிகிச்சை முடிந்து ஓரளவு உடல்நிலை தேறியுள்ள சிவசங்கர் அடுத்த கட்ட
சிகிச்சைக்காகக் காத்திருக்கிறான்.
இந்த இரண்டு சம்பவங்களிலும்
குறிப்பிடப்படும் வசந்தகுமார் யார்? அவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன உறவு?
வசந்தகுமார் அடிப்படையில் ஒரு கணினி
வரைகலைஞர் (Graphic Designer)
தனது முகநூல் நண்பர்களுடன் இணைந்து முகநூல் நண்பர்கள் சங்கம் அமைத்து, பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்து வருகிறார். மேலே கண்ட மூன்று
சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள் முகநூல் நண்பர்கள்
சங்கத்தினர்தான். இந்தச் சங்கத்தின் பொறுப்பாளரான வசந்தகுமார் பேசுகிறார்
சங்கம் கண்ட முகநூல்
“அடிப்படையில்
நான் ஓர் ஓவியன், விளம்பர பதாகைகள், விளம்பர
போர்டுகள் போன்றவைகளை பத்தாண்டுகளுக்கு முன் கையாலேயே வரைந்து டிசைன் செய்து
வந்தேன். விஞ்ஞான வளர்ச்சியால் நானும்
கணினி கற்று அதே வேலையை கணினி மூலம் செய்ய ஆரம்பித்தேன்.. என் வேலை பெரும்பாலும்
இணையத்தை சார்ந்திருந்ததால் ஓய்வு நேரம் கிடைக்கையில் விளையாட்டாக முகநூல் வர
ஆரம்பித்தேன். கிராஃபிக் டிசைனராக நான் இருப்பதால் முதன் முதலில் விளையாட்டாக
நண்பர்களின் பிறந்தநாள், மணநாள் விழாக்களுக்கு வாழ்த்து அட்டைகள்
டிசைன் செய்து அதனை நிலைத்தகவலாகப் போட்டேன். அதன் மூலம் நண்பர்கள்
மகிழ்ந்தார்கள். நட்பு வட்டம் பெருகியது.
பொதுவாக முகநூல் ந்ண்பர்கள் மொக்கை
போடுபவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அரட்டை அடிக்கறதை நான் தப்புன்னு சொல்ல
மாட்டேன். பணி நெருக்கடிகளில் இருக்கும நண்பர்களுக்கு அதுதான் பெரிய ரிலீஃப்.
அதேநேரம் அரட்டை நடுவில் உருப்படியாகவும் இயங்க வேண்டியது நமது கடமைன்னு நினைக்கிறேன்.. ஒருவகையில் அந்த
அரட்டைதான், எங்கள் அமைப்பிற்கு அடித்தளம்னு கூடச் சொல்லலாம். ஒருநாள்
திடீர்னு ஒரு யோசனை தோணுச்சி. முகநூல் நண்பர்களுக்கு இணையம் மூலமாகவே பட்டிமன்றம்
நடத்தினால் என்ன? உடனே செயல்படுத்தினேன். முதன் முதலில் நண்பர்களை வைத்து இணையம்
மூலமாகவே பட்டிமன்றம் நடத்தி அதற்குப் பரிசுகளும் அளித்தோம். இதனால் என் நட்பு
வட்டம் மேலும் பெருகியது.. பெருகிய நட்பு வட்டம்,
இந்த மாபெரும்
மீடியாவின் மூலம் நல்ல விஷயங்களை சூமூகத்துக்கு நாம் ஏன் செய்யக் கூடாது என்ற
கேள்வியையும் எழுப்பியது. அதன் விளைவாக
பிறந்தநாளுக்கு வாழ்த்து அட்டை வெளியிடுவதோடு நில்லாமல் திடீர் குருதி
தேவைகளையும் நிலைத்தகவலில் அறிவிப்பு செய்து சில அறுவைச் சிகிச்சைகளுக்கு குருதி
பெற்றுக் கொடுத்தோம் பின்னர் வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் தங்கள் பிறந்தநாள்
மற்றும் திருமண நாட்களில் ஆதரவற்றோர் ஆசிரமங்களில் உணவளிக்க விரும்பினர் அதை
இங்கிருந்தே நாங்கள் செய்தோம். அவற்றையும் நிலைத்தகவலாகப் போட்டு
மகிழ்ந்தோம். அந்நிலையில்தான் நண்பர்கள்
அளித்த ஆதரவு புதிய எண்ணங்களை எழுப்பியது. இதே செயலை ஏன் இன்னும் விரிவாக ஒரு
பதிவு பெற்ற அமைப்பாக செய்யக் கூடாது என்று நினைத்தபோது எழுந்ததுதான் FFF .அதாவது,
FACEBOOK FRIENDS FOUNDATION இந்த அமைப்பை ஒரு அறகட்டளை போன்ற கட்டமைப்புடன் நிறுவி
உள்ளோம். தவிர, அரசில் பதிவும் செய்திருக்கிறோம். இதில்
அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு 9
நபர்கள் கொண்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளனர். ஷன்முகமூர்த்தி, லியாகத் அலி, எழிலன், வெங்கடேசன், ராமசுப்ரமணியராஜா, கலாராணி, அலீஸ் வசந்த், முனுசாமி
முத்துராமன் மற்றும் நான் ஆக மொத்தம்
ஒன்பது நபர்கள் கொண்ட கட்டமைப்பு இது.....எனினும் அனைத்து உறுப்பினர்களுமே இங்கே
நிர்வாகிகள்தான். தற்போது வரை எங்கள் சங்கத்தில் 170 உறுப்பினர்கள் உள்ளனர்...
எங்கள்
வழக்கறிஞர்களாக தியாகராஜன் மோகன் (ஸ்ரீரங்கம்) தங்க கதிரவன் (நாகபட்டினம்)
ஆகியோரும், ஆர்வலர்களாக மாதவன் விஜயராஜன் (மதுரை), மதன் செந்தில் (சென்னை), சிவா
(திருநெல்வேலி), இளவரசன் (நாகர்கோயில்), கிரிதரன் (சென்னை), சோனா கிரண் (சென்னை)
ஆகியோரும் ஆதரவாளர்களாக டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் டெல்லி கணேஷ், பாடகர் U K . முரளி ஆகியோரும் உள்ளனர். இது தவிர,
வெளிநாட்டிலும் எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளனர். ஜெசுஜெயராஜ் (அபுதாபி), பாலு
முனியசாமி (குவைத்), லோகநாதன் (இலங்கை), நாகூர்கனி (இலங்கை), சங்கர் அஸ்வின்
(குவைத்), தமிழ்செல்வன் (கத்தார்), கன்னைய்யா (கத்தார்), பானுஸ்ரீ (மலேசியா), கபிலன்
(சிங்கப்பூர்), சங்கர் மணி அய்யர் (மும்பை), முருகன் லோகநாதன் (துபாய்) ஆகியோர்
வெளிநாடுகளில் நிர்வாகிகளாக உள்ளனர்.
சங்கத்துக்கு முன்பு
உறுப்பினர் கட்டணம் துவங்கும்போது
வாங்கினோம், அதன் பிறகு எந்தப் பணமும் வசூலிக்கவில்லை..
பொருளுதவியைக் காட்டிலும் தற்போதைய எங்கள்
தேவை உடலுழைப்பே.
கொள்கை ரீதியான முடிவுகளோ, அல்லது பண
பரிவர்த்தனைகளோ நான் தனி ஆளாக ஏதும் செய்திட இயலாத வண்ணம் சங்கம்
கட்டமைக்கபட்டிருக்கிறது.. எங்கள் சங்கத்தின் பெயரைக் கூட முகநூலில் வாக்களித்துத்
தேர்ந்தெடுத்தவர்கள் எங்கள் நண்பர்கள்தான். எங்கள் ஸ்லோகனான ‘நட்பு
சொல்வோம் நற்பணி செய்வோம்’ என்கின்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்தும்
எங்கள் நண்பர்கள்தான்.
இருவர்
எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் ஆரம்பம்
முதலே ஆக்கமும் ஊக்கமும் அளித்து உற்சாகப்படுத்தி வரும் இருவரை நான் இங்கே
குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர்
சந்திராயன் விஞ்ஞானி டாக்டர் திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். முகநூல்
மூலம் அவரும் பல சேவைகள் ஆற்றி வருகிறார் அந்த அனைத்து சேவைகளிலும் எங்களையும்
இணைத்து கொண்டு எங்கள் சங்கத்துக்குப் பெருமை சேர்க்கிறார், அவரோடு
இணைந்து இதுவரை உயர்கல்வி கற்க வழி இல்லாத ஏழை மாணவர்கள் பலருக்கு 1,50,000 ரூபாய்
வரை முகநூல் மூலமே நன்கொடைகள் பெற்று உதவி அளித்திருக்கிறோம் என்பது குறிப்பிட
தக்கது.
எங்களை இன்று வரை தொடர்ந்து ஊக்கப்படுத்தும்
மற்றொரு அன்பு நண்பர் திரைப்பட நடிகர்.
டெல்லி கணேஷ். நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் ஊக்கப்படுத்துவதோடு
மட்டுமல்லாமல் அதற்கான சிறு சிறு நன்கொடைகளையும் வழங்கி உள்ளார், முக்கிய
நிகழ்வுகளில் நேரடியாக வந்து கலந்துகொண்டு சிறப்பு செய்கிறார்.
நம்பினார் கெடுவதில்லை
எங்களது கவனத்திற்கு வரும் விஷயங்களின்
உண்மைத் தன்மையை முதலில் ஆராய்கிறோம். உதவி தேவைப்படுவது உண்மைதான் என்னும்
பட்சத்தில் முகநூலில் நிலைத்தகவல் போடப்படும் அதைக் கண்ட நண்பர்கள் தானே முன்வந்து
உதவிகள் அளிப்பார்கள். .எதையும் திட்டம் போட்டுச் செய்வதில்லை... உதவி கோரி விண்ணப்பம் வந்த பிறகே அதைத்
தீர்த்து வைக்கும் செயலில் இறங்குவேன். இறங்கியபிறகு வேண்டுமானால் திட்டமிடுதல்
தேவைப்படலாம்.
ஒரு ஊரில் ஒருவருக்கு உதவித் தேவைப்படும்
நிலையில் அந்த ஊருக்கருகில் உள்ள எங்கள் நண்பர்கள் சென்று அந்த உதவியைச் செய்து
வருகிறோம், மதுரை, சேலம்,
காஞ்சிபுரம், பாண்டிச்சேரி
உட்பட பல்வேறு ஊர்களில் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறோம். எங்களின்
ஒரே தைரியம், ஆயிரக்
கணக்கான முகநூல் தோழமைகளும் தோழமைகளின் தோழமைகளும் இருக்கிறார்கள். அவர்கள் கைவிட
மாட்டார்கள்.
முகம் காணா நட்புகளாக இருந்தவர்களை நேரில்
சந்தித்த அனுபவங்களும் நிறைய. அவற்றை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அதேநேரம் அந்தச் சந்திப்பின்போது, சமூகத்திற்கு
ஒரு நற்காரியம் செய்யும் வண்ணமே அந்த ஏற்பாடு இருக்கும். குறிப்பாக ரத்ததானம் அளித்தல், கண் தானம்
அளித்தல், கல்வி உதவிகள் அளித்தல் இப்படி பலவாறு...”.
என்ன செய்துள்ளீர்கள்?
“எங்கள் சங்கம்
மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களுக்கு இதுவரை
லட்சக்கணக்கில் கல்வி உதவி
வழங்கப்பட்டுள்ளது. பலமுறை பல்வேறு ஊர்களிலும் நண்பர்கள் ரத்த தான, கண்தான
நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம். நண்பர்களின்
பிறந்தநாளின்போது ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று அங்குள்ள முதியோர் மற்றும்
குழந்தைகளுக்கு உணவளித்து அவர்களுடன் அன்றைய பொழுதைக் கழித்துவருவோம். முனைவர்
மயில்சாமி அண்ணாதுரையின் பிறந்தநாளில் ரத்ததான முகாம் நடத்தி, குழந்தைகள்
காப்பகத்தில் உணவு வழங்கி அவரது சாதனைகளை அங்குள்ள குழந்தைகளிடம் எடுத்துச்
சொன்னது மறக்க முடியாத அனுபவம்.. எண்ணற்றோருக்கு மருத்துவம் தொடர்பான பொருளுதவிகள்
வழங்கியுள்ளோம். தவிர, மதுரை மாநகரில் சுற்றுசூழல் மாசுபடுவதை
தடுக்கும் முகமாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த மாரத்தான் ஓட்டம்
நடத்தியுள்ளோம். இதில் டெல்லி கணேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.”
எதிர்காலத் திட்டம்
நான் முழுநேர சமூக சேவகன் அல்ல இணையத்தில்
எனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றி அதில் சிறிய வெற்றியும்
கண்டிருக்கிறேன் எனக்கு இன்னும் ஒரு பாதுகாப்பான,
நிலையான வாழ்க்கை
அமையவில்லை. ஃபிரீலேன்சர்களுக்கே உரிய வாழ்க்கைமுறைதான் அது. எனக்கு ஒரு நிலைத்த
வாழ்க்கை அமையும்பட்சத்தில் , கணினியைத் தாண்டியும் என் சேவைகளை
விரிவுப்படுத்துவேன்.
கடந்த ஆண்டு கணவனால் கைவிடப்பட்ட ஒரு
அபலைப் பெண்ணை சரியான நேரத்தில் அவள் தவறான முடிவுக்கு போகும் முன்னர் காஞ்சிபுரம்
இல்லத்தில் சேர்த்து வேலையும் வாங்கி கொடுத்து அவளது குழந்தை பள்ளியிலும் சேர்த்து
விட்டதும் ஒரு திருமணம் செய்து வைத்ததை விட பத்து மடங்கு பெரிதாக கருதுகிறேன்...
எதிர்காலத்தில் ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் திட்டமும் உள்ளது.
சூழல் அமையும்போது, கண்டிப்பாக சமூக அக்கறை கொண்ட நண்பர்களின் துணை கொண்டு
நிச்சயம் அதைச் செய்வோம்..
எதிர்காலத்தில் ஆங்காங்கே மாவட்டங்களில்
உள்ள நமது நண்பர்கள் அவர்கள் சார்ந்துள்ள தொழிலை விடுமுறை காலங்களில் ஏழை
இளைஞர்களுக்கு இலவசமாக சொல்லி கொடுக்கும் திட்டம் உள்ளது...
அதன் முதல் வடிவாக அடுத்த கல்வி ஆண்டின்
இறுதியில் சென்னையில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக நான் சார்ந்த தொழிலில்
(போட்டோஷாப், கோரல் டிரா) ஆகிய மென்பொருள்களை என் வீட்டிற்கு வரவழைத்து நானே
இலவசமாக சொல்லிக் கொடுக்கும் திட்டம் மனதில் உள்ளது.. இதுபோல் இன்னும் இதுபோல்
திட்டங்கள் இருக்கு. நண்பர்கள் இருக்காங்க. முடிச்சிக் காட்டுவோம்ல?” என்கிறார்
வசந்தகுமார் உற்சாகமாக..
சிலரது
கருத்துக்கள் :
மயில்சாமி அண்ணாதுரை:
“முகநூலை அரட்டை
அடிப்பதற்கு மட்டும் இல்லாமல் அதன் மூலம் பலருக்கும் உதவுவதற்கு பயன்படுத்திக்
கொள்ள முடிகிறது. வெறும் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதோடு நின்றுவிடாமல் மருத்துவ
உதவி, கல்வி உதவி போன்றவற்றிற்கு
இந்த பெரிய சமூக வலைத்தளத்தை இந்த நண்பர்கள் பயன்படுத்துவது உண்மையிலேயே மிகுந்த
மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.
முகநூல் நண்பர்கள்
சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நான் கலந்துகொண்டு பேசினேன். உதவி செய்ய
மனப்பான்மையுடன் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும், உதவி தேவைப்பட்டு காத்திருக்கிற உள்ளூர்வாசிகளையும்
ஒருங்கிணைப்பது பற்றிக் கூறினேன்.
உரையாற்றவும்,
பட்டமளிப்பு விழாவுக்கும் நான்
கல்லூரிகளுக்குச் செல்லும் போது அங்கு முகநூல் சங்க நண்பர்களும் வருவார்கள். நான்
பேசி முடித்ததும் ‘அவர்களுக்கு
உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்’ என
வந்திருக்கும் பெற்றோர்களுக்கு சொல்வேன். எல்லோரிடமும் உண்டியல் குலுக்கி
சேகரிக்கும் பணத்தைக் கொண்டு ஒரு மாணவரையாவது நிச்சயம் படிக்க வைக்க முடியும்.
இந்த உயர்கல்வித் திட்டத்தை பெரிய அளவில் செய்ய விரும்பி ‘ஆம், நம்மால்
முடியும்’ என்ற அமைப்பையே நிறுவி அதன் மூலம் கடந்த
வருடம் இரண்டரை லட்சம் ரூபாய் திரட்டி அதை மாணவர்களின் படிப்புக்கு கொடுத்தோம்.
இப்படி கல்வியுதவி மட்டுமின்றி மருத்துவ உதவியும் செய்திருக்கிர்றோம்.
சென்னையைச் சேர்ந்த
கூலித்தொழிலாளி ஒருவர் கழுத்தில் அடிபட்டு மருத்துவமனையில் உதவியின்றி தவிக்கிறார்
என்ற செய்தியை முகநூலில் பார்த்துவிட்டு அங்குள்ள மருத்துவரான டாக்டர் மயில்வாகனன்
அவர்களை அழைத்துப் பேசினேன். பின்னர் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்போது அவர் சிகிச்சை முடிந்து வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார். சென்னையில்
இருக்கும் அவருக்கு பெங்களூருவில் இருக்கும் என்னால் உதவி செய்ய முடிந்தது என்றால்
அது முகநூலின் உதவியால்தான்.”
புதிய தலைமுறைக்
கல்வித் திட்டத்தைப் பற்றியும் எனது முகநூலில் குறிப்பிட்டேன். இதன் மூலம்
எங்கெங்கோ இருப்பவர்கள் விண்ணப்பிக்கக்கூடும். உதவிக்காக யாரோ காத்திருப்பதை,
உதவி செய்ய ஒருவர் முன்வருவதை இது போல்
தெரியப்படுத்துவதன் மூலம் யாரோ ஒருவருக்கு அது நிச்சயம் வாழ்க்கையைத் திருப்பித்
தரும் ஒன்றாகவோ, ஏன்
வாழ்க்கையாகவோ இருக்கலாம். அவசியமான விஷயங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இன்னும்
கூட நிறைய விஷயங்களை செய்ய முடியும்.
டெல்லி கணேஷ்:
“வசந்தகுமாரின்
அணுகுமுறை எனக்குப் பிடிச்சிருந்தது. ஒருத்தருக்கு ஒரு உதவி தேவையென்றதும் இவர்
ஒரு ஸ்டேடஸ் போடுவார். அதைப்பார்க்கிற நண்பர்கள் அதை ஷேர் பண்ணுவாங்க. இப்படியே
அந்த உதவிக் கோரிக்கை பரவும். அதைப் பார்க்கும் நண்பர்கள் நண்பர்களின் நண்பர்கள்
தங்களால் முடிந்த சின்ன சின்னத் தொகைகளைக் கொடுப்பாங்க. அதையெல்லாம் சேர்த்து
சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்து விடுவோம். இதுக்குன்னு தனி அக்கவுண்ட், கையிருப்பு
கலெக்ஷன்லாம் வச்சிக்கிறதில்லே. ஒருத்தருக்கு ஒரு உதவி முடிந்தபிறகு, அடுத்தவர்களுக்குச்
செய்ய வேண்டிய உதவிதான் இந்த நண்பர்களின் நோக்கமா இருக்குது.
நானும் பலநேரங்களில் என்னால் முடிந்ததை
இவர்களுக்குக் கொடுத்திருக்கேன். இவர்களின் நிகழ்ச்சிக்காக பல ஊர்களுக்குப்போய்
நானும் கலந்து கொண்டிருந்திருக்கேன். முகம் காணாத நண்பர்கள் மூலம் இது
சாத்தியமாகியிருப்பதுதான் ஆச்சரியம்.”
பானு ஸ்ரீ (மலேசியா பொறுப்பாளர்)
“எனக்கு கடந்த
இரண்டரை ஆண்டுகளாக வசந்தகுமார் அண்ணனை தெரியும்..மலேசியாவில் உள்ள நண்பர்களை அழகாக
ஒருங்கிணைக்கிறார். அவரது நட்புக்குப் பிறகே மலேசியாவில் உள்ள முகநூல் நண்பர்கள்
பலரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றோம். என்னுடைய
பிறந்தநாளுக்கு கூட வெகுதூரத்தில் உள்ள மலேசிய நண்பர்களை நேரில் சென்று என்னை
வாழ்த்தும்படி அவர் சொல்லி என்னை நண்பர்கள் வந்து சந்தித்ததுண்டு. நானும் மற்ற
நண்பர்களின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து சொன்னதுண்டு”
தமிழ்ச்செல்வன் எம்எஸ் (கத்தார்
பொறுப்பாளர்)
“இங்கு சுமார்
40 நண்பர்கள் உள்ளோம். மாதா மாதம் மீட்டிங் போட்டுச் சந்தித்துக் கொள்வோம். வசந்த்
சாரின் நிலைத்தகவலில் யாருக்கேனும் உதவி தேவையென்று இருந்தால் நண்பர்களிடம் பணம்
வசூலித்து அனுப்புவோம். பொதுவாக இங்குள்ள நண்பர்களுக்குப் பொரளார உதவிகள்
தேவைப்படாது. அவர்களுக்கு பாஸ்போர்ட் தொலைதல்,
ரினிவல் பிரச்சினை, தூதரகத்தின்
மூலம் ஆக வேண்டிய வேலைகள்தான் இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் அவர்களுக்கு
நாங்கள் உதவிகள் செய்கிறோம். இந்தச் சங்கம் இல்லாது போயிருந்தால் நண்பர்கள்
ஒன்றிணைய வாய்ப்பு இல்லாது போயிருக்கும்”
சக்திவேல்
(சர்மிளாவின் தந்தை) :
“குழந்தையிலிருந்தே என்
மகளுக்கு இருதயத்தில் ஓட்டை இருந்ததோடு, இருதய வால்வும் குறுகியதாக இருந்தது..
உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து என்ற சென்னை முகப்பேரில் உள்ள ஒரு மருத்துவமனையில்
காட்டியபோது, மூன்றரை லட்சத்துக்கு மேல் செலவாகும் என்றார்கள். பிறகு புதுவை
முதல்வரைச் சந்தித்தபோது, ஒரு லட்சத்து நாற்பதாயிரம் உதவி கிடைத்த்து. மீதப்
பணத்துக்கு நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் நான்
இருந்ததால் என் மகளின் நிலை குறித்து ஒரு ஸ்டேடஸ் போட்டேன். மலேசியாவில் உள்ள எனது
முகநூல் நண்பர் ஜெயா சிர்லி வசந்தகுமாரின் தொலைபேசி எண் மற்றும் அவரது மின்னஞ்சல்
முகவரியை அளித்தார். அவரிடம் தகவல் கூறியவுடன் தனது நண்பர்களுடன் நேரில் வந்து
பார்த்தார். தைரியம் அளித்தார். இதுகுறித்து அவர் ஸ்டேடஸ் போட்டவுடன் ஏகப்பட்ட
நண்பர்கள் குழந்தையை வந்து பார்த்தார்கள். ரத்தம் வேண்டும் என்றவுடன்
பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் ரத்தம் தர முன்வந்தார்கள். வசந்தகுமார்,
சோனாகிரண், கலாராணி, ராஜேந்திரன் ஆகியோர் தொடர்ந்து வந்து பார்த்து உடன்
இருந்தார்கள். புதுவை முதல்வரும் முகநூல் நண்பர்களும் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது...”
லதா (சிவசங்கரின்
தாய்) :
“அடையாறு ஆறுபத்திரிலே
சிகிச்சைக்காக என் மகனைச் சேர்த்த பிறகு ஏகப்பட்ட ஃபேஸ்புக் நண்பர்கள் தினமும்
தொடர்ந்து வந்து பார்த்துக்கிட்டாங்க. சிகிச்சைக்கு ரத்தம் தேவைன்ன உடனே தினமும்
வந்து ரத்தம் கொடுத்தாங்க. எல்லோரும் அக்கறையா விசாரிச்சது எனக்கு ரொம்பத் தெம்பா
இருந்தது. வசந்த் சாரும் அவரோட ஸ்டேடஸ் படிச்சுட்டு என் பையனை நேரில் பார்க்க
வந்தவங்களும் நிறைய பண உதவிகள் செய்தாங்க. பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும்
என் மகனுக்கு ஏற்பட்டுள்ள நோயை எதிர்த்துப் போராட ஃபேஸ்புக் நண்பர்கள்தான் தைரியம்
அளித்துள்ளார்கள். முதல் கீமோ தெரபி முடிஞ்சு அடுத்த கீமோ தெரபி விரைவில்
தரப்போறாங்க. முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினரின் நன்றிகள்...”