Tuesday 23 April 2013



ஃபேக் ஐடிகளின் மாநாடு!

(ஒரு நேரடி கவிதை ரிப்போர்ட்)


புறக்கணிப்புகளால் பொங்கியெழுந்த
ஃபேக் ஐடிகள் பேரணி நடத்தி-
அவசர மாநாடு போட்டன.

தேனாம்பேட்டை குட்டிச் சுவர் ஒன்றிலிருந்து
‘புறக்கணிப்பவர்களைப் புறக்கணிப்போம்’
என்று கோஷமிட்டபடி புறப்பட்டது பேரணி.
வழியிலிருந்த போஸ்டர்களில்
தலைவர்கள், நடிகர், நடிகைகளின்
முகங்களில் சாணியடிக்கப்பட்டன.

‘முகங்களே வேண்டாம் என்கிறோம்
முகப்பூச்சு கிரீம் ஒரு கேடா..?’
என்று கேட்டபடி முகப்பூச்சு கிரீம் பேனர்களைக்
கிழித்தெறிந்தன சில.

ஸ்டுடியோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

மாநாட்டில்-
‘தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில்
அப்பாடக்கர்களைச் சிறையிலடைத்து
லாடம் தட்ட வேண்டும்’ என்று கொந்தளித்தது
‘பட்டாக்கத்தி பைரவனின்
வெண்ணைய் வெட்டும் கத்தி’ என்ற ஐடி.

‘நாம் கமெண்ட், லைக் போட்டு
வளர்த்துவிட்ட சிலர்
இன்று அப்பாடக்கர் ஆனதும்
நம்மையே ஏளனம் செய்கிறார்கள்
நன்றி கெட்டவர்கள்’
புலம்பித் தீர்த்தது
‘நான்தான் தம்பி அடுத்த பிரதமர்’ என்னும் ஐடி.

‘ஒரிஜினல் போட்டோ வைக்கத்
தடை விதிக்க வேண்டும்
அதனால்தானே நாம்
ஏளனம் செய்யப்படுகிறோம்...’ என்றது
‘ஊசி காதில் ஒட்டகத்தை நுழைத்தவன்’ என்கிற ஐடி.

‘நமது நண்பர்களாய் இருக்கும்
ஒரிஜினல் ஐடிகளை பிளாக் செய்து
அவர்களுக்குப் பாடம் புகட்டுவோம்’ என்றது
‘பிளாக் செய்தாலும் வேறு ஐடியில் வருபவன்’ என்ற ஐடி.

‘இன்றைய நிலையில்
பிரதமரிலிருந்து பிச்சைக்காரர் வரை
யாருக்கு இருக்கிறது உண்மை முகம்?
அவங்களைக் காட்டச் சொல்லு.
நாங்க காட்டறோம்...’
என்று சவால் விட்டது
‘ஆப்பில் உட்காருவது எனக்கு ஆஃப் அடிப்பது மாதிரி’
என்ற ஐடி.

‘நம்மை ஃபேக் என்று கிண்டல் செய்பவர்களின்
ஐடிகளை ஹேக் செய்வதற்கென்று
சிறப்புத் தொழில்நுட்பப் பிரிவொன்றை
அமைப்போம்...’ என்று ஆலோசனை சொன்னது
‘எம்பிபிஎஸ் படித்து என்ஜினீயர் ஆனவன்’ என்ற ஐடி.

இறுதியில்,
‘ஃபேஸ்புக் மாதிரி
ஃபேக்புக் என்ற நெட்வொர்க்கை
ஆரம்பிக்க வேண்டும் என்று மார்க்குக்கு
வேண்டுகோள் வைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு
சியர்ஸ் சொல்லி குவார்ட்டர் விட்டு,
கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்து
திருப்தியுடன் கலைந்தன.

1 comment:

  1. ஹ..ஹா..வித்யாசமான சிந்தனை சார்..நல்லருந்தது.

    ReplyDelete