Saturday 7 July 2012


பால்யம்!

-பெ. கருணாகரன்

காலண்டில் முட்டை போட்ட
கணக்கு வாத்தியாரின்
சைக்கிள் டயரை
ஊக்கு வைத்து பஞ்சர் செய்ததுண்டு!

மூன்றாம்ப்பில்
வகுப்புக்கு கட்அடித்து
கமலக்கண்ணனுடன்
பெரிய கோயிலின்
நான்காம் மாடத்தில்
படுத்தபடி
திருட்டு தம் அடித்ததுண்டு!

ஜெகன்மோகினி போஸ்டர் கிழித்து
தரையில் விரித்து
ஜெயமாலினிமேல்
படுத்துப் புரண்டதுண்டு!

தலைதூக்கித் தலைதூக்கிப்
பழிப்பு காட்டும்
ஓணான் கழுத்தில்
தென்னங்குச்சி சுருக்குப் போட்டு
கள்ளிப் பாலை அதன்
கண்களில் ஊற்றி
துடிக்கவைத்து ரசித்ததுண்டு!

ஹோம்ஒர்க் அதிகம்தரும்
சயன்ஸ் வாத்தியாருக்கு
எச்சில் துப்பி துரைபொங்க
காபி வாங்கிவந்து கொடுத்ததுண்டு!

இன்ன பிற வக்கிரங்களும்
துஷ்டத்தனங்களும்
விஷமத்தனங்களும்
எனக்குள் உண்டு நிறைய!

என்றாலும் என்அம்மா
பக்கத்து வீட்டுப் பாட்டியிடம்
கூறிக் கொண்டிருப்பாள்
'என்மகனுக்கு சூது வாது தெரியாது!'

1 comment:

  1. அம்மாக்கள் எப்பவும் அப்படித் தான். அவர்களுக்குத் தன் பிள்ளைகள் என்றுமே ராஜாக்கள் தான்.

    ReplyDelete