Sunday 8 July 2012

மாண்புமிகு மனிதர்கள்




கே. பாலசந்தர்

-பெ. கருணாகரன்

தமிழ்த் திரைப்பட டைரக்டர்களில், ‘ஸ்டார் மேக்கர்கள் நிறைய உண்டு; சூப்பர் ஸ்டார் மேக்கர் ஒரே ஒருவர்தான். அவர்தான் கே. பாலசந்தர். செல்லமாய் கே.பி.
தமிழ் நாடகம், சினிமா இரண்டிலும் இவர் நுழைந்த பிறகுதான், அறிவுப்பூர்வமான மாறுதல்கள் நிகழ்ந்தன. புதுமைகள் பிறந்தன. படிய வாரிய தலை; மடிப்பு கலையாத சட்டை; ஒட்ட வெட்டப்பட்ட நகங்கள்; சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை. இப்படி பாலசந்தர் தொடர்பான எல்லா விஷயங்களிலும் பர்ஃபெக்ஷன்.
தஞ்சை மாவட்டம் _ நல்லமாங்குடி கே.பி. பிறந்த ஊர். பெற்றோர் : கைலாசம் ஐயர், காமாட்சியம்மாள். 9.7.1930_ம் ஆண்டு பிறந்த இவருக்கு, ஓர் அண்ணன்; நான்கு சகோதரிகள். பள்ளி நாட்களில் படிப்பில் சூப்பர் ஸ்டூடண்ட். அந்த நாட்களில், தெரு நண்பர்களைக் கூட்டிக் கொண்டு நாடகங்கள் போடுவார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதும் நாடக ஆசை அடங்கவில்லை. தானே எழுதி, நடித்து இயக்கிய நாடகங்கள் சிதம்பரத்திலும் அரங்கேறின. கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, முத்துப்பேட்டையில் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணி! தனது நாடகங்களை மாணவர்களிடமும் அரங்கேற்றினார் பாலசந்தர்.
பட்டிணப் பிரவேசம்!
1950_ல் சென்னை ஏ.ஜி.எஸ். ஆபீஸில் வேலை. இங்கேயும் பாலசந்தரை நாடக மோகம் விடவில்லை. மாலை ஐந்து மணியடித்ததும், எல்லோரும் வீட்டுக்கு மூட்டை கட்டும்போது, கே.பி.யின் பாதங்கள் சபாக்களை நோக்கி நகர்ந்தன. தனது நாடகத் திறனை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார். அந்த நாளும் வந்தது.
ஏ.ஜி.எஸ். ஆபீஸில் ஒரு விழா. உயரதிகாரியைச் சந்தித்து நாடகம் போட அனுமதி கேட்டார். அதிகாரி சம்மதித்தார். நாடகத்தின் பெயர் சினிமா விசிறிசதா சர்வ காலமும் சினிமாவையே நினைத்துக் கொண்டிருக்கும் கேரக்டரை பற்றிய கதை.
இடையில் இருந்ததோ ஒரே நாள். மொத்த வசனத்தையும் ஒரே நாளில் யாரால் மனப்பாடம் செய்ய இயலும்? இறுதியில், எல்லா கேரக்டர்களையும் தான் ஒருவனே நடித்து விடுவதென முடிவு செய்தார். மோனோ ஆக்டிங்!
ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாடகம்! விதவிதமான கேரக்டர்கள்; உணர்வுகள்; நாடகத்துக்கு ஆடியன்ஸிடம் பலத்த வரவேற்பு! அதன் பிறகு, நாடகங்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இதில் விநோதம் என்னவென்றால், இளைஞரான கே.பி. போட்டதெல்லாம் அப்பா வேடம்!
நாடகங்களில் நடித்தபடியே தனக்கென்று சொந்தமாக ராகினி ரெக்ரியேஷன்ஸ்என்ற பெயரில், ஒரு நாடகக் குழுவையும் ஏற்படுத்திக் கொண்டார் கே.பி. சபா வாய்ப்புகளுக்காகக் காத்திராமல் திருமணம், ஜானவாசம் என்று எங்கு வாய்ப்புக் கிடைத்தாலும் நாடகம் போட்டார்.
பாமா விஜயம்!
மகள் புஷ்பலதா பிறந்த நேரம் - கே.பி.யின் வாழ்வில் நல்ல நேரம். அவருக்கு, வி.எஸ்.ராகவன் குழுவுக்கான முழுநீள நாடகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தின் பெயர் கௌரி கல்யாணம்! இதில் கே.பி. வில்லனாக நடித்தார்.
ஏ.ஜி.எஸ். ஆபீஸின் உயரதிகாரி டிரான்ஸ்பராகிப் போனபோது, பிரிவு உபசார விழாவில் கே.பி. மேடையேற்றிய நாடகம், மேஜர் சந்திரகாந்த். மேஜர் சந்திரகாந்த்தாக கே.பி.யே நடித்தார். இந்த நாடகத்தில் ஃபேட்இன், ஃபேட்அவுட் என பல மேடைப் புதுமைகளைப் புகுத்தினார்.
அமெச்சூர் நாடகத்திலிருந்து முழுநீள நாடகம் நடந்த முடிவு செய்தார் கே.பி. சுந்தரராஜன் நடிக்க ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் மேஜர் சந்திரகாந்த் அரங்கேறியது. அதே நாடகம் மீண்டும் நாரத கான சபாவில் நடந்தது.
இந்தக் காலக்கட்டத்தில்தான் கே.பி.யுடன் நெருக்கமானார் நாகேஷ். அவருக்காக எழுதப்பட்ட நாடகம்தான் சர்வர் சுந்தரம்.மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 25 முறை மேடையேறியது சர்வர் சுந்தரம்.
இந்த நிலையில்தான், கே.பி.யின் மெழுகுவர்த்திஎன்ற நாடகத்துக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர். தெய்வத்தாய்படத்துக்கு வசனமெழுதும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
அரங்கேற்றம்!
கே.பி. டைரக்ட் செய்த முதல் படம் நீர்க்குமிழிகே.பி.யால் அரங்கேற்றப்பட்ட ஐந்தாவது வெற்றிகரமான நாடகம் நீர்க்குமிழி. இதில் நடித்தவர் நாகேஷ். இந்த நாடகம் அரங்கேறிய போதே, பலத்த வரவேற்பு. நாடகத்தைப் பார்த்த டைரக்டர் ஏ.கே.வேலன் அந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்.
நீர்க்குமிழிக்குப்பிறகு, பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, எதிர்நீச்சல், இருகோடுகள் என்று ஏகப்பட்ட படங்கள் இயக்கினாலும் 1973_ல் வெளிவந்த அரங்கேற்றம்படம் அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ்ப்படவுலகத்தினர் தொடுவதற்கும் யோசிக்கிற கதை. பாலசந்தரின் ட்ரீட்மெண்ட்- அந்தக் கதையை எல்லோரும் ஏற்கும்படி செய்தது. அதன்பிறகு, இவரது படமாக்கல் முறை மாறியது. சொல்லதான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு என்று தொடர்ந்து வந்த படங்கள், பாலசந்தரின் தனித்துவத்தை நிரூபித்தன.
எல்லாப் படங்களிலும் புதுப்புது உத்திகள்; புதுப்புது ஃபிரேம்கள். டைரக்ஷனில் பாலசந்தர் டச் என்று தனி ஸ்டைலே உருவானது. இவர் தொட்டதெல்லாம் துலங்கியது; கண்பட்டதெல்லாம் நடித்தது.
கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி என்று இன்று திரையுலகை ஆக்கிரமித்திருக்கும் பல நடிகர், நடிகைகள் பாலசந்தரின் அறிமுகங்கள்தான். அதேபோல், விசு, அமீர்ஜான், நடிகை லட்சுமி, வஸந்த், சுரேஷ் கிருஷ்ணா சரண், ஹரி, என்று டைரக்ஷனில் சினிமாவைக் கலக்கிக்கொண்டிருக்கும் இவரது சிஷ்யப்பிள்ளைகள் ஏராளம்.
தமிழ்த் தவிர, கன்னடம், தெலுங்கு, இந்திமொழிப் படங்களிலும் கே.பி.யின் வெற்றி முத்திரைகள் ஏராளம். மரோசரித்ராஅறுநூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. தேசிய விருதுகள், மாநில அரசு விருதுகள், தனியார் நிறுவன விருதுகள் என்று ஏராளமான விருதுகள் அவரது வரவேற்பறையில். ஆனால், பேசும்போதோ, ‘நான் ஒண்ணும் பெருசா செய்துடலையேஎன்பார் குழந்தை மாதிரி.
நான் அவனில்லை!
கே.பி.யின் கோபம் நாடறிந்தது. ஆனால், அது சில நொடிகளிலேயே மறையும் நீர்க்குமிழி போன்றது. தான் எதிர்பார்த்தது கிடைக்காதபோது, பொறுமையின்மையினால் வருகிற கோபம் அது.
நடிகரோ, நடிகையோ நடித்தது திருப்தியில்லாதபோது, தானே நடித்துக் காட்டுவார். அதன் பிறகும் சரியாக நடிக்கவில்லை என்றால்தான் கோபம் வரும். திட்டி விடுவார். திட்டுவாங்கிய கலைஞர் அடுத்த ஷாட்டில் சரியாக நடிக்கும்போது, மனம் விட்டுப் பாராட்டுவார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், ஜாலியாக இருப்பார். அவர்தானா இவர்என்று ஆச்சரியமாய் இருக்கும்.
அவர்கள்!
சின்னத்திரையை இப்போதுகூட பல சினிமா இயக்குநர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பெரிய திரையில் பிஸியாக இருந்த காலத்திலேயே, பாலசந்தர் சின்னத் திரைத் தொடர்களையும் இயக்கினார். சினிமாவுக்கு அடுத்து டி.வி. மீடியாதான் பவர்ஃபுல்லாக வரும் என்று அப்போதே தீர்மானித்த தீர்க்கதரிசனம் அது. இவர் இயக்கிய ரயில் சிநேகம், பிரேமி, கையளவு மனசு, காசளவு நேசம், ஜன்னல் என்று டி.ஆர்.பி.யை எகிற வைத்த சீரியல்கள் ஏராளம்.
மின்பிம்பங்கள்தயாரிப்பில் உருவான சீரியல்கள் மூலம் உருவான இயக்குநர்கள் பட்டியலும் நீளமானது. சி.ஜே.பாஸ்கர், நாகா, சுந்தர் கே.விஜயன், ‘மெட்டிஒலிதிருமுருகன், சமுத்திரக்கனி, பத்ரி _ இவர்கள் அனைவரும் பிறந்த இடத்தின் பேர் சொல்லும் பிள்ளைகள். சின்னத்திரையின் கலக்கல் மன்னர்கள்!
அச்சமில்லைஅச்சமில்லை
ஏராளமான வெள்ளிவிழாப் படங்கள், நூறு நாள் படங்களைக் கொடுத்த இந்தச் சிந்தனை மார்க்கண்டேயருக்கு, இப்போது வயது 82. ஆனால், அவரது சிந்தனைகளிலோ என்றும் 16. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் இவர் பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 125. சினிமா, சின்னத்திரை ஆகியவற்றில் இவர் டைரக்ட் செய்தவற்றின் எண்ணிக்கை 100க்கும் மேல். கே.பி. மகா துணிச்சல்காரர். யாருக்காகவும் எதற்காகவும் தனது கருத்துக்களில் பின் வாங்கமாட்டார்.
தன்னைப் பற்றி ஒரே வார்த்தையில் கே.பி. வைக்கும் விமர்சனம்: ‘‘அச்சமில்லை!’’



No comments:

Post a Comment